அரசு அதிகாரியின் மனைவியை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த அரசு அதிகாரியின் மனைவியை தாக்கி 50 பவுன் நகை, ரூ.20,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று காலையில் மனோகரன் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர்.
மதியம் வீட்டில் பத்மாவதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் கதவை உள்பக்கமாக பூட்டினர். பின்னர் பத்மாவதியிடம் கத்தியை காட்டி நகை, பணம் எடுத்துத் தருமாறு மிரட்டினர். அதற்கு பத்மாவதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், பத்மாவதியின் வாயில் துணியை அடைத்து வைத்து அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த பத்மாவதி சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர்கள், வீட்டு அலமாரியில் இருந்த பையில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, ரூ.20,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் உட்பட கையில் சிக்கிய பொருட்களுடன் தப்பியோடிவிட்டனர்.
மயக்கம் தெளித்து எழுந்த பத்மாவதி, கொள்ளை சம்பவம் குறித்து கணவர் மனோகரனிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிரம் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன், துணை சூப்பிரண்டு கே.ராஜேந்திரன், பெரிய காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சின்ன காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் ஆகியோர் விசாரனை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள், தடவியல் வல்லுநர்கள் வரவழைப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் ராம்போ கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் இருந்து 1 கி.மீ சென்று அங்கேயே நின்றுவி்ட்டது.
கொள்ளை சம்பவம் குறித்து பத்மாவதி கூறியதாவது,
வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் 3 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். கத்தியைக் காட்டி பணம், நகைகளை தருமாறு மிரட்டினர். அதற்கு மறுத்த என்னைத் தாக்கினர். அதன்பிறகு நான் மயக்கமடைந்துவிட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது எனது தாலி, நகைகள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். 3 கொள்ளையர்களில் ஒருவரை மட்டும் எனக்கு அடையாளம் தெரியும் என்றார்.