முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளர் சஞ்சய் செளத்ரி துபாயில் கைது
டெல்லி: துபாயில் இருந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடாவின் உதவியாளரான சஞ்சய் செளத்ரி இன்டர்போல் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டதாக ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா. இவர் பதவியில் இருந்த போது துபாய் உட்பட பல வெளிநாடுகளில் நிலங்கள், சொத்துக்கள் வாங்கி போட்டுள்ளார். அதனை மது கோடாவின் உதவியாளர் சஞ்சய் செளத்ரி என்பவர் பராமரித்து வந்தார். அதற்காக அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து துபாய்க்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். புகையிலை வியாபாரியின் மகனான சஞ்சய் செளத்ரி மதுகோடாவின் உதவியால் பணக்காரர் ஆனார்.
இந்த நிலையில் முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா பதவியில் இருந்த போது சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு மதுகோடா, அவரது உதவியாளர்கள் பினோத் சின்கா, மதுகோடாவின் அமைச்சரவையி்ல் பதவி வகித்த சிலரும் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சய் செளத்ரியை கைது செய்ய ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் இன்டர்போலின் உதவியை நாடினர். இதனையடுத்து துபாயில் வசித்து வந்த சஞ்சய் செளத்ரியை நேற்று இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தகவல்களை ராஞ்சி சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில், மதுகோடா பதவியில் இருந்தபோது பல நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வரிஏய்ப்பு, சொத்துக் குவிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.