பாலி தீவில் கிழக்காசிய மாநாடு- ஒபாமாவை சந்திக்கிறார் மன்மோகன் சிங்
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற உள்ள கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்ல இருக்கிறார். அப்போது அங்கு வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒபாமா இந்தியாவிற்கு வந்து சென்ற பின்னர் இந்த ஆண்டு இருவரும் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.
ஆசியா – பசுபிக் மண்டல நாடுகளுடன் சுமூக உறவு மேம்படுத்துவதையே அமெரிக்க விரும்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒபாமா நவம்பர் மாத மத்தியில் நட்புரீதியிலான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆஸ்திரேலியா செல்லும் அவர் அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். பின்னர் இந்தோனேசியா செல்கிறார். அங்கு நடைபெறும் கிழக்காசிய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் ஒபாமா நவம்பர் 18 ம் தேதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும் அப்போது அவர் ஒபாமாவை சந்திக்கவில்லை. மேலும் எந்த முக்கிய நாட்டின் தலைவரையும் அவர் அப்போது சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.