பணவீக்க எஃபெக்ட்: சம்பளம், போனஸ், படிகளை உயர்த்த 86 சதவீத நிறுவனங்கள் முடிவு!!
டெல்லி: தாறுமாறாக உயரும் விலைவாசியைக் கருத்தில் கொண்டு ஊழியர்களின் சம்பளம், போனஸ் மற்றும் இதர படிகளை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சமீபத்தில் வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆய்வு முடிவில் இது தெரிய வந்துள்ளது.
மொத்தம் 2,156 மூத்த அதிகாரிகளிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
86 சதவீத நிறுவனத் தலைவர்கள் சம்பள உயர்வு அவசியம், உடனே அதைச் செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளனர். மீதி 14 சதவீத நிறுவனங்கள் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளனவாம்.
தென்னிந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 83 சதவீதம் இத்தகைய ஊதிய உயர்வை அளிக்க முன்வந்துள்ளன. வட இந்தியாவில் 71 சதவீத நிறுவனங்களும், மேற்கு பகுதியில் 68 சதவீதமும், கிழக்குப் பகுதியில் 53 சதவீதம் நிறுவனங்களும் ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
43 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. 42 சதவீத நிறுவனங்கள் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளன. 14 சதவீத நிறுவனங்கள் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஒரு சதவீத நிறுவனங்கள் மட்டுமே 30 சதவீதத்துக்கும் அதிகமாக ஊதிய உயர்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளன.
ஏன் ஊதிய உயர்வு?
பணவீக்கத்தை சமாளிக்க மட்டுமல்ல, தங்களை விட்டு வெளியேறிவிட முயலும் திறமையான பணியாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்த சம்பள உயர்வு அவசியம் என்று கருதுகின்றனவாம் பெரும்பான்மை நிறுவனங்கள்.
பொதுவாக ஊழியர்களின் பணியாற்றும் திறன் அடிப்படையில் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. நிறுவனத்தின் நிதி ஆதாரம், போட்டி நிறுவனம் அளிக்கும் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் இம்முறை பணவீக்கத்தின் தாக்கத்தை நிறுவனங்கள் கடுமையாக உணர்ந்துள்ளன. தங்களது ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து ஊதியத்தை உயர்த்த முன்வந்துள்ளதாக கருத்துக் கணிப்பை நடத்திய இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்தார். இத்தகைய ஊதிய உயர்வு அடுத்த நிதி ஆண்டிலும் தொடரும் என நம்புவதாக அவர் கூறினார்.
பொதுவாக ஒரு வேலையில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை விரும்பவில்லை என்றும், 67 சதவீத ஊழியர்கள் புதிய வேலைக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
26 சதவீதம் பேர் மட்டுமே தங்களது இப்போதைய பணியில் தொடர விரும்புகிறார்களாம். 7 சதவீதம் பேருக்கு எந்த ஐடியாவும் இல்லையாம்.