2010-2011ம் ஆண்டில் ரூ.149 கோடி நிகர லாபம் ஈட்டிய டிஎன்பிஎல் நிறுவனம்
கரூர்: தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் ஈவுத் தொகை ரூ.12 கோடியே 22 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 2010-2011ம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.149 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கரூர் அருகே உள்ள காகிதபுரத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய காகித தொழிற்சாலையான தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார்.
அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான இது லாபத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 2010-2011ம் ஆண்டுக்கான ஈவுத் தொகையில் அரசின் பங்கான ரூ.12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 2010-2011ம் ஆண்டில் வரி செலுத்திய பிறகு ரூ.149 கோடி ரூபாய் நிகரலாபம் அடைந்துள்ளது.
இதன் பயனாக தமிழக அரசுக்கு 50 பங்கு ஈவுத் தொகையாக ரூ. 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500க்கான வரைவுக் காசோலை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது.
அப்போது தமிழக தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.