கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி-தமிழகத்தில் ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சி
குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான ரப்பரின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சரிந்து வருகிறது இந்த ஆண்டு ரப்பர் சீசன் துவங்கிய சில நாட்களிலே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் உற்பத்தி குறைந்தது. இருப்பினும் ரப்பருக்கு விலை அதிகமாக காணப்பட்டதால் விவசாயிகள் ஆறுதலாக இருந்தனர்.
சீசன் துவங்கி ஆறு மாதத்தில் இலை உதிர்ந்து பால் வடிப்பு தொழில் நிறுத்தும் சூழல் ஏற்பட்ட போது மழை பெய்தது. தற்போது காலை வேளையில் குளிர் வீசுவதால் பால் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ரப்பரின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் தொழில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவில் டயர் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
இதனால் ரப்பரின் தேவை குறைந்துவிட்டதால், குமரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியாகும் ரப்பரின் அளவும் பெருமளவு குறைந்துவிட்டது.
இத்தோடு புதிய ஏற்றுமதியும் தடை செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே ஒப்பந்தப்படியான அளவு ரப்பர் மட்டுமே ஏற்றுமதி ஆகிறது.
மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு 160 ரூபாய்க்கு ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே ரப்பரின் விலை மேலும் குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் சுமார் 25 ரூபாய்க்கும் மேல் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.