சர்ச்சை மேல் சர்ச்சை: ராஜஸ்தான் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா
ஜெய்பூர்: சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது ராஜஸ்தான் அரசு. இந்நிலையில் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. அந்த அரசு சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. நர்ஸ் பன்வாரி தேவி மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நர்ஸாக பணி புரிந்தவர் பன்வாரி தேவி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இவரைக் காணவில்லை. ஜோத்பூர் மாவட்ட தலைநகரிலிருந்து ஜாலிவாடா கிராமத்தில் உள்ள சுகாதார மையத்துக்கு பணிப்பெண்ணாக இவர் சென்றதிலிருந்து வீடு திரும்பவில்லை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவரது கணவர் அமர்சந்த், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
தனது மனைவியை நீர்வளத்துறை அமைச்சர் மஹிபால் மதெர்னாவின் ஆள்கள் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்டோபர் 16ம் தேதி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் முதல்வர் அசோக் கெலோட்.
இந்த விவகாரத்தில் இன்னொரு காங்கிரஸ் தலைவருக்கும் தொடர்பு உள்ளது. பன்வாரியின் தேவியுடன் தொடர்பு இருந்தது என்று மதெர்னாவும், அந்த தலைவரும் சிபிஐயிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். பன்வாரி தேவி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் மதெர்னா ஜாட் சமூகத் தலைவர்.
கடந்த செப்டம்பர் மாதம் கோபால்கரில் நிலத் தகராறில் குஜ்ஜார்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதலின்போது போலீசார் துப்பாக்கி்ச்சூடு நடத்தியதில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்த பிரச்சனைகள் போதாது என்பதுபோன்று பரஸ் தேவி என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அமைச்சர் ராம் லால் ஜாட் தனது பதவியை ராஜினாமா செய்தார். கெலோட் அரசில் 16 கேபினட் அமைச்சர்களும், 11 மாநில அமைச்சர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று மதியம் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேச முதல்வர் கெலோட் இன்று மாலை டெல்லி செல்கின்றார்.