உணவு பொருள் விலை உயர்வால் அக்டோபரில், பொது பணவீக்கம் 9.73 சதவீதமாக உயர்வு
டெல்லி: உணவு தானியங்கள் மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வால், நடப்பு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொது பணவீக்கம் 9.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் உணவு பணவீக்கம் 11.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முந்தைய செப்டம்பர் மாதத்தில் 9.72 சதவீத இருந்த பொதுப்பணவீக்கம் 9.73 சதவிகித்தை எட்டியுள்ளது. இதே போன்று செப்டம்பர் மாதத்தில் 9.23 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், அக்டோபரில் இரட்டை இலக்கமான 11.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவுப்பொருள் பணவீக்க உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர், பிரணாப் முகர்ஜி, காய்கறிகள் மற்றும் பருப்புகளின் விலை உயர்வு அதிகரித்துள்ளதே உணவுப்பணவீக்கம் 11.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளதற்கு காரணம் என்று தெரிவித்தார்.
உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தில் உயர்ந்திருப்பது கவலையளிக்கிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலையாகும் என்று கூறியுள்ளார். அக்டோபர் மாதத்தில் திருவிழாக்காலங்கள் அதிகம் இருந்தத்தால் உணவுப்பொருட்களின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்தது. இதுவும் பணவீக்க உயர்வுக்கு ஒரு காரணம் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
பருப்பு உற்பத்தி குறைவு
கடந்த மாதத்தில் பருவ மழை காரணமாக சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் விலை வாசி உயர்வு ஏற்பட்டது. தற்பொழுது பருவ மழை குறைந்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து உணவுப் பொருட்களில் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் கரீப் பருவத்தில் பருப்பு உற்பத்தி 6.43 மில்லியன் அளவாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவிகிதம் குறைவாகும்.