தமிழ் மண்ணில் அணு உலை தேவையில்லை: தொல்.திருமாவளவன் பேச்சு
இடிந்தகரை: தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவேன், என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 28 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "வருங்கால சந்ததியினர் சிறந்த முறையில் பிறந்து வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தமிழர்களின் போராட்டம். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் யுரோனியம் அதிகளவில் கிடைக்கிறது. யுரோனியத்தை விற்பனை செய்யும் எண்ணத்துடன், இந்தியா போன்ற நாடுகளில் அணுஉலைகளை அமைக்கும் திட்டத்தை அந்த நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன.
அணுஉலை பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பானது அல்ல என்பதை குறித்து ஆய்வு செய்ய தேவையில்லை. விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்த வரை தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவேன். இது குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்றத்தில் எனக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் எனது எம்.பி. பதவியை கூட ராஜினாமா செய்வேன்", என்றார்.