புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை பதவி நீக்க ஜனாதிபதி ஒப்புதல்
புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய புதுச்சேரி அமைச்சர் கல்யாண சுந்தரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக துணை நிலை ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து கல்யாண சுந்தரம் அமைச்சர் பதவியை இழக்கிறார்.
புதுச்சேரியில் கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த அக்டோபர் மாதம் திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து தலைமறைவான கல்யாணசுந்தரம், இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும் கடந்த வாரம் அமைச்சர் மீதான முன்ஜாமீன் மனுவை நீதிபதி பழனிவேலு தள்ளுபடி செய்தார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். இதனையறிந்த அமைச்சர் மீண்டும் தலைமறைவனார்.
பதவி நீக்க பரிந்துரை
இந்த நிலையில் கல்யாண சுந்தரந்தை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதனை ஏற்று கல்யாண சுந்தரத்தின் பதவியை நீக்கக்கோரி புதுவை முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் அனுப்பிவைத்தார். அதனை ஏற்று கல்யாண சுந்தரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை புதுவை துணை நிலை ஆளுநர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கல்யாணசுந்தரம் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.