ஆபரேசனுக்கு பணம் கட்டாததால் நோயாளியை சிறைவைத்துள்ள தனியார் மருத்துவமனை
நெல்லை: அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்தாததால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று நோயாளியை சிறைபிடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் மாசானம். அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது தந்தை சுப்பையாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தேன். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதற்கு ரூ.18,000 செலவாகும் என்று தெரிவித்தனர்.
நான் முதலில் ரூ.15,000 கொடுத்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் எனது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை செலவாக ரூ.99,900 வேண்டும் என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அறுவை சிகிச்சைக்கு செலவான தொகைக்கு பி்ல் கேட்டேன்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பணத்தைக் கட்டிய பிறகு பில் கொடுப்போம் என்று கூறினர். என்னால் அவ்வளவு பணம் கட்ட முடியாததால் எனது தந்தையை கடந்த 4 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிறை வைத்துள்ளனர். போலீசை வைத்து மிரட்டி பணம் கட்டச் சொல்கின்றனர். எனது தந்தையை பார்க்க முடியாததால் அவரது நிலைமை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. எனவே, எனது தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.