கூடங்குளம் போராட்டம்: வைகோ, திருமா, ஜி.கே. மணி,மேதா பட்கர் மீது வழக்கு
கூடங்குளம்: கூடங்குளத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருபவர்கள் மீதும், அதி்ல் கலந்து கொண்டமைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13,500 கோடி செலவில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் திடீரென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த இரு மாதங்களாக தென்தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அனுமதி இன்றி போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தேச துரோக வழக்கு, அரசுக்கு எதிராக செயல்படுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொய் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் பாதிரியார்கள், போராட்டக் குழு தலைவர், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் 77 வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் புதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது ஒரு வழக்கும், பாமக தலைவர் ஜி.கே. மணி மீது ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது 2 வழக்குகளும், தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் மீது 2 வழக்கும், திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மீது 1 வழக்கும், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது 1 வழக்கும், சமூக சேவகி மேதா பட்கர் மீது 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.