இந்தியாவுக்கு யுரேனியம் விற்கும் ஆஸ்திரேலியா: எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்பு
பெங்களூர்: இந்தியாவின் தேவை அதிகரித்து வருவதை அறிந்து இந்தியாவுக்கு யுரேனியம் விற்க தீர்மானித்துள்ள ஆஸ்திரேலியாவின் முடிவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்றுள்ளார்.
ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு, தனது அமைச்சர்களுடன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு ஜூலியா கூறியதாவது,
எங்கள் வெளிநாட்டு கொள்கை சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மட்டுமே யுரேனியம் வழங்க அனுமதிக்கிறது. இந்தியாவுக்கு நாங்கள் யுரேனியம் வழங்க முடியாது. இப்போது நாங்கள் யுரேனியம் வழங்கும் நாடுகளின் அதே நிலைக்கு இந்தியாவும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்றார்.
இந்த கருத்தை வரவேற்றுள்ள இந்திய வெளியறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது,
இந்தியாவுக்கு யுரேனியம் விற்பது தொடர்பாக ஆளும் தொழிலாளர் கட்சியின் கொள்கையில் மாற்றம் செய்ய நினைக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டின் முடிவை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் யுரேனியம் தேவையை அறிந்து ஆஸ்திரேலியா எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறேன்.
இதன்மூலம் இரு நாடுகளின் உறவு மேலும் பலப்படும். இரு நாடுகளின் உறவில், 'ஆற்றல்' என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனநாயக நாடான இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவின் உறவை மேம்படுத்த ஆஸ்திரேலிய ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றார்.