முடிவெடுக்கப்படாத தூக்குத் தண்டனை கைதிகள்- மத்திய அரசிடம் 'லிஸ்ட்' கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நாடு முழுவதும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை முடிவெடுக்கப்படாமல் உள்ள கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை டிசம்பர் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதி்மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால் இங்கு விசாரணை நடத்தக் கூடாது, வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி வெங்கட் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. முதலில் பஞ்சாபைச் சேர்ந்தவர் புல்லர் என்பவர் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்திருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மூத்த வழக்கறிஞர் கே.பி.எஸ். துல்சி ஆஜரானார். அவர் வாதிடுகையில், உள்துறை அமைச்சகம், இந்தக் கருணை மனுக்களின் மீது, எந்தெந்தத் தேதிகளில் முடிவு எடுத்தது என்ற விவரம், தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
உடனே, நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, மத்திய அரசு வக்கீலான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராவத்விடம், இந்தியாவில் முடிவு எடுக்கப்படாமல், ஜனாதிபதியிடமும், மாநில கவர்னர்களிடமும் நிலுவையில் இருக்கின்ற அனைத்துக் கருணை மனுக்களைப் பற்றிய, முழு விவரங்களையும், டிசம்பர் 16-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
எப்போது கருணை மனுக்கள் பெறப்பட்டன? எப்போது நிராகரிக்கப்பட்டன? என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டு. அதனுடைய பிரதியை, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்காக ஆஜராகும் வக்கீல் ராம் ஜெத்மலானிக்கும் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் ராம்ஜேத்மலானியிடம் நீதிபதி சிங்வி கூறுகையில்,
இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள பலர் வசதி அற்றவர்கள் என்பதால், வக்கீல்களைக் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வாய்ப்பு இல்லாமல் இருப்பார்கள். எனவே, இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்து உள்ளவர்கள் அனைவர் சார்பிலும், இதுகுறித்து இந்த நீதிமன்றம் தக்க முடிவு எடுக்க உதவுகின்ற வகையில், நீங்கள் இந்த நீதிமன்றத்தின் நண்பனாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த ராம் ஜேத்மலானி, இதை இந்த நீதிமன்றம் எனக்கு அளித்த பெருமையாகக் கருதுகின்றேன். இந்தியா முழுமையும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக நான் வாதாடுவேன். அதற்கு இடையில், சென்னையில் உள்ள மூவர் தூக்கு குறித்த வழக்கில், வாதிடுவதை ஒத்தி வைப்பேன் என்றார்.
அதேபோல இன்னொரு மூத்த வக்கீலான அந்தியர்ஜுனாவையும் இந்த வழக்கதில் உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து ராஜீவ் கொலையாளிகள் குறித்த வழக்கு விசாரணை ஜனவரி 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்ட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பல காலமாக சிறையில் வாடி வரும் பலருக்கு விமோச்சனம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.