தங்க நகை கடன் திட்டத்தில் ரூ. 4 கோடி மோசடி: நிதி நிறுவன உரிமையாளருக்கு வலை
உடன்குடி: உடன்குடியில் தங்க நகை கடன் திட்டத்தில் ரூ. 4 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவன அதிபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனி நபர் ஒருவர் தங்க நகைகளுக்கு உடனடியாக கடன் கொடுப்பதாகவும், 3 மாதத்திற்குள் நகைகளை திருப்பினால் வட்டி இல்லை எனவும் அறிவித்து விளம்பரப்படுத்தினார். இதை பார்த்த பலர் தங்களிடம் இருந்த நகைகளை அவரது நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றனர்.
தொடக்கத்தில் அவர் அறிவித்தபடியே 3 மாதத்திற்குள் அடகு வைத்த நகைகளை திருப்பியவர்களுக்கு வட்டி இல்லாமல் நகைகளை திருப்பிக் கொடுத்தார். இந்த விஷயம் தீயாய் பரவ பலர் அந்த நிறுவனத்தை நாடிச் சென்றனர். சிலர் வங்கி லாக்கர்களில் இருந்த தங்களது நகைகளை எடுத்து அந்த நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றனர். இதில் பலர் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்.
இதற்கிடையே அந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் கமிஷன் அடிப்படையில் சில புரோக்கர்களை பணிக்கு அமர்த்தினார். அந்த புரோக்கர்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருப்பவர்களை அணுகி உங்கள் நகைகளை லாக்கரில் வைத்து முடக்குவதை விட இந்த நிறுவனத்தில் வைத்து பணம் பெற்று 3 மாதங்களில் நகைகளை திருப்பினால் வட்டி கிடையாது. உங்களது வியாபாரத்துக்கும் பணம் கிடைத்துவிடும் என்று மூளை சலவை செய்தனர்.
இதை உண்மை என்று நம்பிய பலர் தங்களது நகைகளை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அந்த நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றனர். இவர்களது இந்த செயலுக்கு சில வங்கி ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தான் லாக்கர் உரி்மையாளர்களின் முகவரிகளை புரோக்கர்கள் பெறுகிறார்கள்.
இது போன்று தன்னிடம் அடகு வைத்த நகைகளை அந்த நிறுவன உரிமையாளர் உடன்குடியில் இருக்கும் தனியார் நிதி நிறுவன வங்கியில் தனது பெயரில் அதிகபட்ச தொகைக்கு அடகு வைத்து ரூ.4 கோடி வரை கடன் பெற்றுள்ளார்.
கணிசமான அளவுக்கு பணம் சேர்ந்தவுடன் அந்த நிதி நிறுவன உரிமையாளர் திடீரென மாயமாகிவிட்டார். இந்த தகவல் அறிந்ததும் அந்த நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.