மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட மிக மோசமானவர்கள்- மமதா திடீர் கண்டுபிடிப்பு!
இவரது பேச்சால் மாவோயிஸ்டுகளுக்கும், மமதாவுக்கும் இடையே சமரசம் பேசி வந்த மத்தியஸ்தர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட்டனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தங்களது அதிரடித் தாக்குதல்களை தொடரக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் கடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது தலைவிரித்தாடியது. குறிப்பாக மேற்கு மிதினாப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதை சமாளிக்க முடியாமல் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் அரசு திணறி வந்தது.
ஆனால் அந்தப் பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மமதா, நக்சலைட்களை ஒழிக்க முடியாததை பெரிதாக்கி தேர்தலில் ஆதாயமாக மாற்றிக் கொண்டார்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான போரின்போது மேற்கு வங்க அரசுக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாறாக, மத்திய அரசிடமிருந்து கூடுதல் படைகள் வராமலும் தடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது முதல்வராகியுள்ள நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் திரினமூல் காங்கிரஸாருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன. இதில் 2 திரினமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நக்சலைட்டுகளுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கையில் இறங்கும்படி போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுடன் சமரசப் பேச்சு நடத்த மமதாவால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகரிக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, மாவோயிஸ்டுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் மமதா. இதுகுறித்து அவர் கூறுகையில், மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை மிகக் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள். அவர்கள் சுடும்போது நாங்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதை நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மாவோயிஸ்டுகளுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை, மாறாக மக்களை சுடுவதிலும், கொல்வதிலும்தான் கவனமாக உள்ளனர்.
மக்களைக் கொன்று குவித்துக் கொண்டே பேசலாம் என்று கூறுவதை யாரும் ஏற்க முடியாது. சட்டம் ஒழுங்கை நாங்கள் காப்பாற்றியாக வேண்டும். எங்களைச் சுற்றி மக்கள் கொன்று குவிக்கப்படு்போது அதை கைகளை கட்டி நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது.
அவர்களுக்கு நல்ல புத்தி வரும் என்று இந்த நிமிடத்தில் கூட நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். விரைவில் அவர்கள் பொது வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன். அவர்கள் அப்படி முன்வந்தால் அவர்களை நாங்கள் வரவேற்போம்.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதிலிருந்து நாங்கள் விலகிப் போக முடியாது.
சிலர் மாவோயிஸ்டுகளுக்கு பணமும், ஆயுதங்களும், தங்குமிடமும் கொடுத்து உதவுகின்றனர். அதை அவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் நக்சலைட்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் கெட்டவர்களும் மக்கள் மத்தியில் கலந்திருக்கலாம். அவர்கள் குறித்து மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார் மமதா.