எழும்பூர் ரயில்வே நிலையம் பறிபோவதை தடுக்க 22ம் தேதி வியாபாரிகள் நடைபயணம்
நெல்லை: எழும்பூர் ரயில் நிலையம் பறிபோவதை தடுத்து நிறுத்திட வரும் 22ம் தேதி வியாபாரிகள் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
எழும்பூர் ரயில் நிலையம் பறிபோவதை தடுப்பது சம்பந்தமாக நெல்லை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. சொனா வெங்கடாச்சலம், வியாபாரிகள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர்.குணசேகரன், விநாயகம் மற்றும் ரயில் பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுப்பிரமணியன் பேசுகையில்,1907ம் ஆண்டு முதல் 104 ஆண்டுகளாக எழும்பூர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. எழும்பூரில் இடநெருக்கடி என்பதை காரணம் காட்டி சென்னையில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக்க முயற்சிக்கின்றனர்.
இதனால் தென் மாவட்டத்தில் இருந்து செல்லும் ரயில்கள் தாம்பரத்திலேயே நிறுத்தப்படும். 155 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையத்தை ஒரு முனையமாக்கி, எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் 16 ரயில்களை ராயபுரத்தில் இருந்து இயக்கினால் 16 புதிய ரயில்களுக்கு எழும்பூரில் இடமிருக்கும். நகரம் விரியும் போது ஊருக்கு வெளியே தான் முனையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கூற்று பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ரயில்கள் ஊருக்குள் தனிப்பாதையில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. எனவே, எழும்பூரில் உள்ள ரயில்வே முனையத்தை மாற்றக் கூடாது. இதை வலியுறுத்தி வரும் 22ம் தேதி வியாபாரிகள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இது நெல்லை ஜங்ஷன் அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு, மேம்பாலம் கீழ் வழியாக மதுரை ரோட்டில் சென்று ரயில் நிலையத்தை சென்றடையும். ரயில்வே மேலாளரிடம் மனுக் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் 27 ஊர்களில் இதே போன்று நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் வியாபாரிகள், ரயில் பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.