மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை, உடந்தையாக இருந்த தாய் கைது
புளியங்குடி: குழந்தை தன்னைப் போல் இல்லை என்று கூறி அதை புதரில் வீசிய தந்தையையும், தாயையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் மதுரை-தென்காசி மெயின் ரோட்டில் தொடக்க கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள புதரில் கடந்த 17ம் தேதி பசசிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் மற்றும் போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்ச்சை அளித்த பிறகு நெல்லை சரணாலய ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த குழந்தை வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி, அவரது மனைவி சசிகுமாரி ஆகியோருக்கு பிறந்தது என்பது தெரிய வந்தது. போலீசார் சசிகுமாரியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு கடந்த 16ம் தேதி குழந்தை பிறந்ததாகவும், 17ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் குழந்தை தன்னைபோல் இல்லை என கணவர் சந்தேகப்பட்டு தன்னிடமிருந்து குழந்தையை பறித்து புதரில் வீசியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சசிகுமாரியையும், முத்துபாண்டியையும் கைது செய்தனர்.
மேலும் குழந்தை பிறந்ததை மறைத்தது தொடர்பாக வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.