ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்!: தீர்ப்பாயம்
13வது நிதிக் கமிஷனுக்காக நடத்தப்பட்ட ஆய்வில், நாடு முழுவதும் மின் வாரியங்கள் ரூ. 75,000 கோடி நஷ்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நஷ்டம் 2015ம் ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், உரிய காலத்தில் மின் கட்டணங்களை மாநிலங்கள் உயர்த்ததாதே என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 39 மாநிலங்களின் மின் வாரியங்களில், 22 வாரியங்களின் பெரும் நஷ்டத்தில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில மின்வாரியங்களின் நஷ்டம் தான் மிக மிக அதிகமாக உள்ளதாகவும் 'கிரெசில்' தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மின்சார மேல்முறையீடு தீர்ப்பாயம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்துக்குள், அடுத்த நிதியாண்டுக்குத் தேவைப்படும் நிதி, கட்டண உயர்வு குறித்து அனைத்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் (தமிழகத்தில் உள்ளது Tamil Nadu Electricity Regulatory Commission-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்) முடிவு செய்ய வேண்டும்.
ஓராண்டில் கிடைக்கும் சாரசரி வருவாய் (aggregate revenue requirement-ARR) மற்றும் அடுத்த ஆண்டுக்குத் தேவைப்படும் நிதி ஆகிய விவரங்களை வருடாவருடம் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாகவே மின்வாரியங்கள் ஒழுங்குமுறை ஆணையங்களிடம் சமர்பிக்க வேண்டும்.
இதை தாக்கல் செய்ய மாநில மின்வாரியங்கள் தாமதம் செய்தால், சம்பந்தப்பட்ட மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின் கட்டணத்தை தானாகவே உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு மத்திய மின்சார மேல்முறையீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக மின் வாரியத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,800 கோடி கடன் அளித்தது. ஆனால், இனிமேல் மின்வாரியத்துக்கு கடன் வழங்க மாட்டோம் என வங்கிகள் மறுத்து வருவதாகவும் தெரிகிறது.