குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும்: அன்னா யோசனை
பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அன்னா ஹசாரே பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
குடிகாரர்களை அனைவரும் பார்க்கும்படி பொது இடத்தில் நிற்கை வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அவர்கள் குடிப்பழக்கத்தை விடுவார்கள். ஆனால் அவ்வாறு தண்டனை கொடுப்பதற்கு முன்பு அவர்களை எச்சரிக்க வேண்டும். அதற்கும் கேட்காவிட்டால் தான் கசையடி கொடுக்க வேண்டும்.
எங்கள் கிராமத்தில் யாராவது குடித்தால் அவர்களை 3 முறை எச்சரிப்போம். அதற்கும் கேட்காவிட்டால் அந்த நபரை கோவிலுக்கு இழுத்து வந்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொல்வோம். அதன் பிறகும் குடிப்பழக்கத்தை விடாவிட்டால் அவரை கோவில் அருகே உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்றார்.
காங்கிரஸ், பாஜக கண்டனம்
அன்னா கூறியுள்ள இந்த தண்டனை ஷரியத் சட்டத்தை மதிக்காதவர்களை தாலிபான்கள் தண்டிப்பது போன்று உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார். அன்னாவின் தண்டனை முறை போன்று தான் தாலிபான்களும் தெரிவித்தனர் என்று நினைக்கிறேன். அப்படி பார்த்தால் கேரளாவில் உள்ள பாதி பேர், ஆந்திராவில் உள்ள 4ல் 3 பங்கு பேர், பஞ்சாபில் உள்ள 5ல் 4 பங்கு பேரை கட்டிவைத்து அடிக்க வேண்டும் என்றார்.
அன்னாவின் இந்த கருத்திற்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக ஒருநாளும் இதுபோன்ற தண்டனை முறைகளை ஏற்றுக் கொள்ளாது என்று அவர் தெரிவித்துள்ளார்.