இஷ்ரத்தை தியாகி என்று கூறியது லஷ்கர்: ஜி.கே.பிள்ளை!
டெல்லி: இஷ்ரத் ஜஹான் ஒரு மதத் தியாகி என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அதை இணையத்தளத்திலிருந்து நீக்கி விட்டனர் என்று முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இஷ்ரத் ஜஹான் அகமதாபாத் அருகே என்கவுண்டரில் கொல்லப்படவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பிள்ளை கருத்து தெரிவிக்கையில், இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் என்ற குஜராத் அரசின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். இஷ்ரத் ஜஹான் குறித்து இந்திய உளவு அமைப்புகள் அவருக்கு எதிரான தகவல்களையே கொண்டிருந்தன.
அப்போது உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இஷ்ரத்தும், அவருடன் இருந்தவர்களும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெளிவாக நம்பப்பட்டது.
மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் இணையத்தளத்தில் அவரை ஒரு மதத் தியாகி என்று குறிப்பிட்டிருந்தனர். பின்னர் அது நீக்கப்பட்டது.
இஷ்ரத் தீவிரவாத அமைப்பேச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து எஸ்ஐடி விசாரிக்கவில்லை. மாறாக, அவர் கொல்லப்பட்டது எப்படி என்பதைத்தான் அது விசாரித்து தனது கருத்தைச் சொல்லியுள்ளது. இஷ்ரத் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ள எஸ்ஐடி அவரும், மற்றவர்களும் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லவில்லை என்றார் பிள்ளை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அதிகார மட்டத்தில் முக்கிய சக்தியாக சில மாதங்களுக்கு முன்பு வரை வலம் வந்தவர் ஜி.கே.பிள்ளை. இந்த நிலையில் அவர் குஜராத் அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.