ஹவுரா-டேராடூன் சென்ற டூன் எக்பிரஸின் 2 பெட்டிகளில் தீ: 7 பேர் பலி
கிரித்: ஹவுராவில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த டூன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று அதிகாலை தீ பிடித்ததில் 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹவுராவில் இருந்து டேராடூனுக்கு புறப்பட்ட டூன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஏசி பெட்டிகளான பி1 மற்றும் பி2ல் திடீர் என்று தீப்பிடித்தது என்று மண்டல ரயில்வே மேனேஜர்(தன்பாத் பிரிவு) சுதிர் குமார் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தன்பாத் பிரிவு ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிவாரண ரயில் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கயா-கோமோ-தன்பாத் வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிய விரும்புவோர் 03326413660, 03326402241, 03326402242, 03326402243 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.