இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் - அரசு முறைப்படுத்துமா?
தனியாரின் ஆதிக்கத்தில் இருந்த கேபிள் டிவியை தமிழக அரசு முறைப்படுத்தி கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு கேபிள் டிவி மூலம் சேனல்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. இணைப்புக்கு 70 ரூபாய் மட்டுமே தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும் தற்போது வழங்கப்படும் இணைப்புகளில் தரமில்லை, போதிய சேனல்கள் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளது.
குறிப்பிட்ட மூன்று தனியார் சேனல்கள் இல்லாமல் கொடுக்கப்படும் இணைப்புகளுக்கு மட்டும் ரூ. 70 வசூலிக்கப்படுகிறது. ஆனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவரவர் விருப்பம் போல, மாதக் கட்டணம் ரூ. 70-க்கு பதிலாக ரூ. 100 முதல் ரூ. 150 வரை இணைப்புதாரர்களிடம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வசூலிக்கும் கட்டணத் தொகை மாறுபடுகிறதே தவிர, எந்த ஒரு பகுதியிலும் முழுமையாக அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், பொதுமக்களுக்கும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் தொடர்ந்து பிரச்னை உருவாகியுள்ளது.
நடவடிக்கை தேவை
அரசு அறிவித்த தொகையைவிட, பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி கூடுதலாக ரூ. 30 வசூலிக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் தெரிவித்துள்ளார். பெறப்படும் தொகைக்கு ரசீதும் வழங்குவதில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அவர் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
டிஷ் மூலம் ஒளிபரப்பு
புகார்களுக்கு பதிலளித்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்துள்ள 70 ரூபாய் கட்டணம் ஏற்புடையதாக இல்லை என்று கூறியுள்ளனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட மூன்று தனியார் சேனல்கள் டிஷ் டிவி மூலம் அரசு கேபிள் டிவியில் ஒளிப்பரப்பப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ. 30 வசூலிக்க வேண்டியுள்ளதாக கூறினர். சென்னையில் இருந்து வரும் பிரதான இணைப்பும் தரமானதாக இல்லை. இதனால், அனைத்து இணைப்புகளிலும் நிகழ்ச்சிகள் சரியாகத் தெரிவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சேனல்களுக்கு கட்டுப்பாடு
இதனிடையே உள்ளூர் தொலைக்காட்சிகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றில் செய்திகள் ஒளிபரப்ப அனுமதிக்கும் பட்சத்தில், பணம் பறிக்கும் செயல்களும், அத்துமீறல்களும் அதிகரிக்கும். எனவே, உள்ளூர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான வறைமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் நபர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே அரசு கேபிள் டி.வி பொதுமக்களிடையே நிரந்தர வரவேற்பைப் பெறும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.