வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோட்டத்தை சுற்றுலாத்தலமாக்க கோரிக்கை
தேனி: கண்ணகி கோட்டத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று குளோபல் டிரஸ்ட் நிறுவனம் தேனி கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளது.
குளோபல் டிரஸ்ட் நிறுவன தலைவர் ஆறுமுகம் தேனி மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
உலக சுற்றுலாத்தலங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள தேக்கடியின் மற்றொரு பகுதி லோயர்கேம்பில் உள்ள கண்ணகி கோவில்.
தேக்கடிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள வனப்பகுதிகளை சுற்றிப்பார்க்க விரும்புகின்றனர். கண்ணகி கோட்டத்தில் யானை, கரடி, புலி,மான், காட்டெறுமை போன்ற மிருகங்களும், சிங்கவால் குரங்குகளும் உள்ளன.
சுரங்னார் நீர் வீழ்ச்சி, அருகில் பெருமாள் கோவில், வைரவனார் அணை, குருமனத்து அணை, பேயத்தேவன் அணைக் கட்டுகளும் உள்ளன. இங்கு போட்டிங் விடுவதற்கு வசதிகள் உள்ளது. இறைச்சல் பாலம் வழியாக வரும் ராட்சத குழாய்கள் உள்ளன. கண்ணகி கோட்டம் வரலாற்று புகழ் வாய்ந்த இடமாக உள்ளது. இதன் அருகில் ஆதிவாசி மக்கள், பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இது வெளிநாட்டு பயணிகளை மிகவும் கவரும்.
சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு தேவையான ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன. இங்குள்ள வண்ணாத்திபாறையில் அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. எனவே, இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.