கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கடாபி மகன் காமிஸ் உயிருடன் இருக்கிறாரா?
திரிபோலி: லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் இளைய மகன் காமிஸ் இறந்துவிட்டதாக ஏற்கனவே பல முறை அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் உயிருடன் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தனது இளைய சகோதரர் காமிஸ் இறக்கவில்லை இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று தெரிவித்ததாக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திரிபோலியில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள டெர்ஹௌனாவில் காமிஸ் இருப்பதாகவும், அவரை விரைவில் கைது செய்யப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காமிஸ் கொல்லப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 29 தேதி போராளிகள் அறிவித்தனர். இதனை கடாபி ஆதரவு தொலைக்காட்சி நிலையமும் உறுதி செய்தது. இந்நிலையில் காமிஸ் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
கைதாகியுள்ள சைப் அல் இஸ்லாமிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. கைதானவுடன் தன்னை விடுவிக்க அவர் போராளிகளுக்கு 2 பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.