3ஜி ரோமிங் ஒப்பந்த விவகாரம்: பிரதமர் உத்தரவாதம் வழங்கக் கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்
டெல்லி: 3ஜி ரோமிங் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையில் பிரதமர் தலையிட வேண்டும். எங்களுக்குள் செய்யப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, தொலைத் தொடர்புத்துறை 3ஜி உரிமத்தை ரத்து செய்தால், நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட முதலீடுகளை தொலைத் தொடர்புத்துறை திரும்பத் தர ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இதுதொடர்பாக பார்தி ஏர்டெல், வோடோபோன், ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளன.
அதில், 3ஜி ரோமிங் ஒப்பந்தம் தொடர்பாக, பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, உரிமம் பெறாத பிராந்தியங்களிலும், 3ஜி சேவையை, இந்த நிறுவனங்கள் பரஸ்பரம் வழங்க முடியும். இதற்கு, மத்திய தொலைத்தொடர்புத் துறை, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம், 3ஜி உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறும் வகையிலும், அரசுக்கு நிதிச் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி செயல்பட, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில், நிவர்த்தி செய்ய முடியாத பிரச்னைகள் ஏற்படும். ஒப்பந்தத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலத்தின்போது நாங்கள் தாக்கல் செய்த தொகையை, வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கடிதத்தை ஏர்டெல் தலைவர் மற்றும் தலைமை செயலதிகாரி சுனில் மிட்டல், ஐடியா செல்லுலார் நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா, வோடோபோன் நிறுவன தலைமை செயலதிகாரி விட்டோரியோ கோலோ ஆகியோர் அனுப்பியுள்ளனர்.
தற்போது இந்தியா முழுமைக்கும் ஒரே நிறுவனத்திற்கு 3ஜி ரோமிங் சேவையை மேற்கொள்ளும் உரிமை யாருக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் 3ஜி உரிமையைப் பெற்றுள்ள இந்த நிறுவனங்கள், தங்களுக்கு உரிமம் அளிக்கப்படாத பிற பகுதிகளில் சேவையைத் தொடர தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஆனால் இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று சட்ட அமைச்சகத்தின் கருத்தைப் பெற்று தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், இது 3ஜி உரிமம் பெறுவது தொடர்பான விதி்முறைகள், நிபந்தனைகளுக்குப் புறம்பானது என்றும் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 68,000 கோடி கிடைத்தது. இது எதிர்பார்த்ததை விட மிகவும் அதிக தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.