லோக்சபா அமளி துமளி, ஒத்திவைப்பால் ரூ. 1 கோடி மக்கள் பணம் வீண்!
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. துவங்கியவுடனேயே உபி விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் 2ஜி ஊழல் விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் குரல் எழுப்பின. அதிலும் 2ஜி ஊழலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நேற்று லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரையில் இந்த புறக்கணிப்பைத் தொடர்வது என்றும் எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. முக்கியப் பணிகள் இருப்பதால் நாடாளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு தருமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதையும் அவை கண்டுகொள்ளவில்லை.
ராஜ்ய சபா கூடியதும் அவை உறுப்பினர்கள் சில்வியஸ் கொண்டபென் மற்றும் ராம் தயால் முண்டா ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக 5 மணி நேரம் கூடும் லோக்சபா இந்த அமளி காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் 4 மணி நேரம் அவை செயல்படவில்லை. இதனால் நாட்டுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.