மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம்-அரசின் அப்பீல் மனு தள்ளுபடி
திமுக ஆட்சிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை 13 ஆயிரம் பேரை கடந்த வாரம் பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி சுகுணா, பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்ததுடன், அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இடைக்கால தடையை நீக்கக்கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால், டி.எஸ். சிவஞானம் அடங்கிய பெஞ்ச் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மக்கள் நலப்பணியாளர்களை பணியில் மீண்டும் அமர்த்துவது தொடர்பான வழக்கு தனி நீதிபதி சுகுணா முன்பு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதன்பின்னர் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.