எழும்பூர் வரை ரயில் இயக்க கோரி பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் ஊர்வலம்
நெல்லை: தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் தாம்பரத்துடன் நிறுத்த திட்டமிடுவதை கண்டித்து பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினர்.
தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்கின்றன. இதனை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிற்க செய்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வியாபாரிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் செங்கோட்டை கிளை சார்பாக செங்கோட்டை ரயில் நிலைய மாஸ்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ஸ்டேஷன் மாஸ்டர் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனகர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
தெற்கு ரயில்வே தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள், தற்போது எக்மோர் வரை செல்வது ரயில்வே நிர்வாகத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் அந்த ரயில்களை தாம்பரத்தோடு நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் தென் தமிழக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் உடனே கைவிட வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.