பாம்பன் வடக்கு பகுதியில் உயர எழுந்த ராட்சத அலைகள்: மக்கள் பீதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக மழைப் பெய்து வரும் நிலையில் பாம்பன் பாலம் அருகே கடல் அலைகள் அதிக உயரத்தில் எழும்பியதால் ரயில் பயணிகள் பீதியடைந்தனர்.
ராமேஸ்வரத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் நேற்று மாலையில் நல்ல மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாம்பன் பகுதியில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கரையோரங்களில் இருந்த சில மீன்பிடி குடிசைகளை கடல்நீர் இழுத்து சென்றது. பாம்பன் பாலத்தில் சென்ற ரயில் பெட்டிகளை தொட்டு செல்லும் அளவுக்கு கடல் அலைகள் உயர எழும்பின. இதனால் ரயிலில் பயணித்தவர்கள் பீதியடைந்தனர்.
கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று வழக்கம் போல மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.