நெல்வரத்து குறைவு: பாவூர்சத்திரம் பகுதியில் அரிசி விலை உயர்வு
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் பகுதிக்கு நெல்வரத்து குறைந்துள்ளதையடுத்து அங்கு அரிசி விலை உயர்ந்துள்ளது.
பாவூர்சத்திரம் பகுதியில் விவசாயத்தை அடுத்து அரிசி வியாபாரம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு அரவை செய்யப்படும் அரிசி தமிழகம் மட்டுமின்றி கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் போன்ற வடமாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது அங்கிருந்து நெல்வரத்து குறைந்துவிட்டது. பாவூர்சத்திரம் பகுதியில் இப்போது தான் நெல் நடவு செய்யப்படுகிறது.
இதனால் நெல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல் மற்றும் அரிசி விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ரூ. 500க்கு கொள்முதல் செய்யப்பட்ட அம்பை 16 உருட்டு ரக நெல் மூடை தற்போது ரூ.800க உயர்ந்துள்ளது. பொன்னி ரக நெல்லுக்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பொன்னி ரகம் ரூ.1,100க விலை உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது. பொன்னி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300ல் இருந்து ரூ.2,900 ஆகவும், அம்பை 16 குவிண்டாலுக்கு ரூ.1,300ல் இருந்து ரூ.1,600 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.