உ.பியில் கைதான லஷ்கருடன் தொடர்புடைய தவுபிக் சென்னை சிறையில் அடைப்பு
சென்னை: ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த தவுபிக் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கைது செய்யப்பட்டு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் புழல்சிறையில் அடைத்துள்ளனர்.
தஞ்சாவூர் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த தவுபிக். இவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் மீது, குண்டுவெடிப்பு, பாஸ்போர்ட் மோசடி, ஹவாலா மோசடி உட்பட பல்வேறு வழக்குகள், தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.
தேடப்பட்ட தீவிரவாதி
கடந்த 2002-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் வெடிகுண்டு புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி. இதேபோல, மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். திருச்சியில் ஹவாலா பணம் பரிமாற்ற வழக்கிலும், சென்னை வடக்கு கடற்கரை போலீசில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
கேரளாவிலும் இவர்மீது ஒரு வழக்கு இருந்தது.இந்த வழக்குகள் சிலவற்றில் தவுபிக் விடுதலையும் பெற்றிருந்தார். சில வழக்குகளில் இவர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இவர் தலைமறைவாகிவிட்டார்.
டெல்லி அருகே கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி அருகே உள்ள நொய்டா என்ற இடத்தில் தவுபிக் பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நொய்டா சென்ற தனிப்படை போலீசார் உத்தரபிரதேச தீவிரவாதிகள் தடுப்பு போலீசார் உதவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவுபிக்கினை கைது செய்தனர்.
நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவுபிக், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வணங்காமுடி தவுபிக்கை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தவுபிக் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.