100வது நாளைத் தொட்ட கூடங்குளம் போராட்டம்: ரத்ததான முகாம், கூட்டு பிராத்தனை
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடக்கும் போராட்டம் இன்றோடு 100வது நாளை எட்டுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தற்போது 3வது கட்டப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக அணுமின் நிலையத்துக்கு வேலைக்கு செல்வோரை தடுக்கும் முற்றுகை போராட்டம் நடந்தது. மூன்றாம் கட்டமாக இடிந்தகரையில் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராம மக்கள் பங்கேற்று அணு உலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் தூத்துக்குடி அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். மேலும் இடிந்தகரை, கூடங்குளம் பகுதி பொது மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி முதல் கட்ட போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இன்றோடு 100 நாள் ஆகிறது.
இதை முன்னிட்டு இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன்பு இன்று ரத்ததான முகாம் நடக்கிறது. மேலும் சர்வ மதத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரார்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.