ராட்சத கடல் அலையில் சிக்கிய மிதவை படகு கவிழ்ந்து 210 டன் பாமாயில் வீண்
நாகப்பட்டினம்: நாகையில் பாமாயில் ஏற்றிக் கொண்டு வந்த மிதவை படகு ராட்சத அலையில் சிக்கி பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 210 டன் பாமாயில் கடலில் கொட்டி வீணானது.
பனாமா நாட்டைச் சேர்ந்த வேர்ல்டு பிரிட்ஜ் என்ற கப்பல், மலேசியாவில் இருந்து 4,000 டன் கச்சா பாமாயில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் வந்தது. பெரிய கப்பல் என்பதால் கடற்கரையில் இருந்து 3 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டது.
பின்னர் பார்ஜர் என்ற மிதவை படகுகள் மூலம் பெரிய கப்பலில் இருந்து கடற்கரைக்கு பாமாயில் கொண்டு வந்து இறக்கப்பட்டது. நேற்று மதியம் 3 மணி அளவில் 210 டன் பாமாயில் எண்ணெய் ஏற்றப்பட்ட மிதவை படகு ஒன்று கடல் அலையில் சிக்கி தவித்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த பாறையில் மோதி கவிழ்ந்தது.
இதனையடுத்து படகில் பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்களும் கடலில் குதித்து நீந்தி கரையை அடைந்தனர். படகு கடலில் கவிழ்ந்ததில் அதில் இருந்த 210 டன் பாமாயில் எண்ணெயும் கடலில் கொட்டி வீணானது. கடல் நீரின் மீது எண்ணெய் பரவி 1 கி.மீ தூரத்துக்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. கடலில் கொட்டிய பாமாயிலின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
கடல் அலையின் மூலம் அடித்து வரப்பட்ட எண்ணெய் படலம் கடற்கரையிலும் பரவி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாகை துறைமுக அதிகாரிகள், கடற்கரைக்கு சென்று விசாரித்தனர். கடலில் கவிழ்ந்த படகு இன்னும் மீட்கப்படவில்லை. கடற்கரையில் பரவியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.