இஷ்ரத் ஜஹான் குறித்த பேச்சு: ஜி.கே.பிள்ளை வெட்கப்பட வேண்டும்- பெண்கள் அமைப்பு
டெல்லி: இஷ்ரத் ஜஹான் பல ஹோட்டல்களில் ஒரு ஆணுடன் தங்கியதாக கூறியுள்ளதற்காக முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கேட்க வேண்டும். இளம் பெண் ஒருவரை போலியான என்கவுண்டர் மூலம் படுகொலை செய்ததை ஆதரித்துப் பேசிய தனது பேச்சுக்காக வெட்கித் தலை குணிய வேண்டும் என்று ஜாமியா ஆசிரியர்கள் ஆதரவு என்ற பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து ஜாமியா ஆசிரியர்கள் ஆதரவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இஷ்ரத் ஜஹான் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார் என்று எஸ்ஐடி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜி.கே.பிள்ளை, தனது பேச்சில் விஷத்தைக் கொட்டியுள்ளார்.
இஷ்ரத் ஒரு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு கொண்டவர். பல்வேறு ஹோட்டல்களில் ஒரு ஆணுடன் தங்கினார். அது சந்தேகத்திற்குரியது. அவர் தீவிரவாதி இல்லை என்று எஸ்ஐடி கூறவில்லை என்று பேசியுள்ளார் பிள்ளை.
இவர் சொல்வதைப் பார்த்தால் தனியாக வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் இப்படித்தான், அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கும், அவர்கள் அனைவருமே சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று நம்மை கருத வைப்பது போல உள்ளது.
இஷ்ரத்தும், அவருடன் 3 பேரும் கொல்லப்பட்டவுடனேயே அந்த வழக்கு முடிந்து போய் விட்டது என்பது பிள்ளைக்குத் தெரியும். இஷ்ரத்துக்கு, லஷ்கருடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்து எந்தக் கோர்ட்டும் இப்போது விசாரிக்கப் போவதில்லை. என்கவுன்டர் படுகொலைகளுக்கு இது வசதியான அம்சமாகும். புகார்கள் ஒருபோதும் நிரூபிக்கப்படுவதில்லை, நிராகரிக்கப்படப் போவதும் இல்லை.
இஷ்ரத்தை லஷ்கர் அமைப்பு புகழ்ந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தங்களுக்குச் சாதகமாக ஏதாவது கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு பிரபலமாகத் துடிப்பது இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஒரு சாக்காகும்.
ஒரு பெண்ணின் குணநலனை இழிவிபடுத்தும் வகையில், அவர் மீது செக்ஸ் புகார் கூறிய பிள்ளையின் அறிவற்ற பேச்சைக் கடுமையாக கண்டிக்கிறோம். தன் மீதான புகாரை மறுக்கக் கூட இப்போது இஷ்ரத் இல்லை. எனவே பிள்ளையின் இந்த அறிவற்ற பேச்சுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த அறிக்கையில், பல்வேறு பெண் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர், பேராசிரியைகள், பெண்கள் அமைப்பினர், சமூக சேவகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அகமதாபாத் அருகே என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் இது போலியான என்கவுண்டர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி. இதுகுறித்து விசாரித்தது. பின்னர் அது தனது இறுதி விசாரணை அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை. வேறு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் ஜி.கே. பிள்ளையோ முந்திரிக்கொட்டைத்தனமாக, இஷ்ரத் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதைத்தான் விசாரித்துள்ளது எஸ்ஐடி. மற்றபடி அவர் தீவிரவாதி இல்லை என்று அது கூறவில்லை. இஷ்ரத் ஒரு ஆணுடன் பல ஹோட்டல்களில் தங்கியுள்ளார். அவருக்கும் லஷ்கர் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் கூறியுள்ளன. லஷ்கர் அமைப்பும் கூட இஷ்ரத்தை புகழ்ந்துள்ளது என்று பேட்டி அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.