தொடர் பருவ மழை எதிரொலியா சென்னையில் பரவுகிறது எலிக்காய்ச்சல்
சென்னை பருவமழை தீவிரத்தினால் சென்னை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு எலிக்காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடலை முடக்கும் சிக்குன் குனியா, உயிரை பறிக்கும் பன்றிக்காய்ச்சல் வரிசையில் சென்னை மாநகரத்தில் எலிக்காய்ச்சல் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது.
சளித் தொந்தரவுடன், காய்ச்சல், கை, கால் மூட்டுக்களில் வலி போன்ற அறிகுறிகளை கொண்டது எலிக் காய்ச்சல். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண காய்ச்சலுக்கான மாத்திரை உட்கொண்டால் அது குறையாது. மாறாக கல்லீரலை பாதித்து அதன் தொடர்ச்சியாக மஞ்சள் காமாலை, சிறு நீரகம் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் நலம் கெடும் எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள்.
காய்ச்சலுடன் உடல் வலியும் இருந்தால் உடனே ரத்தப்பரிசோதனை செய்வது அவசியம். எலிக்காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்து விட்டால் குணமாக்கி விடலாம்.
எப்படி வரும் எலிக் காய்ச்சல்?
வீடுகளில் உள்ள எலிகள் உணவுப்பொருட்கள் மீது உட்காருதல், எலி கழிவுகள் பட்ட உணவை உட்கொள்வது எலிக்காய்ச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே வீட்டில் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
தெருவில் இறந்து கிடக்கும் எலியின் கழிவுகள் சாக்கடையில் கிடக்கும் எலிகளின் கழிவுகள் மழைநீருடன் தெருவில் ஓடுகிறது. இதில் நடக்க நேரிடுவதால் காலில் உள்ள நுண்ணிய துளைகள் மூலம் வைரஸை கிருமிகள் நம் உடலுக்குள் கொண்டு சென்று விடும். எனவே மழை நீர், சாக்கடை கழிவு நீரில் நாம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் வீட்டுக்கு சென்றதும் கை, கால்களை கழுவ வேண்டும்.
சென்னையில் பரவுகிறது
சமீபத்தில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி சோதனை கூடத்தில் நடந்த ரத்தப் பரிசோதனையில் 50 பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர பல தனியார் ஆஸ்பத்திரிகளிலும் எலிக்காய்ச்சலுக்காக பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எலி காய்ச்சல் வேகமாக பரவுவது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, எலிக்காய்ச்சல் சிலருக்கு இருக்கலாம். வேகமாக பரவுவதாக எந்த தகவலும் இல்லை. சென்னை மாநகராட்சி சார்பில் எலிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் எலிகளை ஒழிக்கும் நிறுவனங்களுக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.