26/11 மும்பை தாக்குதல்: 3 ஆண்டுகள் நிறைவடைந்தும் தீவிரவாதிகளுக்கு தண்டனையில்லை
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றினர். தனித்தனி குழுவாக சென்ற தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்ததால், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 நாட்கள் கடும் சண்டை நடந்தது. முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவரை தவிர, 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் வெளிநாட்டினர், பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 166 பேரை பலியாகினர்.
மும்பையில் தாக்குதல் நடத்தியதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா,
பாகிஸ்தான் இனியும் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. இத்தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
கசாப்புக்கு 16 கோடி செலவு:
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு சிறப்பு நீதிமன்றமும், மும்பை ஐகோர்ட்டும் மரண தண்டனையை உறுதி செய்தாலும், தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் கசாப் பாதுகாப்பு செலவுக்கு மட்டும் இதுவரை 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் மும்பையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து சிறப்பு பயிற்சி மேற்கொண்ட 350 வீரர்கள் அடங்கிய பயங்கரவாத சிறப்பு தடுப்பு படை (என்.எஸ்.ஜி.,) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 17 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது
தொடர் தாக்குதல் சம்பவம்:
பாதுகாப்பு பலப்படுத்த நிலையிலும் மும்பையின் தெற்குப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கூட தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அதில் 150க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
அடிக்கடி நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு நமது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாதது மற்றும் குற்றவாளிகள் மீது ஆட்சியாளர்கள் துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளாதது ஆகிய இரண்டும் தான் முக்கிய காரணம். அதனால்தான் அந்நிய சக்திகளின் ஊடுருவலும், தாக்குதலும் அதிகரித்து வருகிறது. எத்தனை முறை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் எந்த ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.