கரூரில் சட்ட விரோதமாக செயல்பட்ட 138 சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
டெக்ஸ்டைல் தொழிலின் சார்புத் தொழிலான சாயப்பட்டறைகள் அதிகளவில் கரூரில் செயல்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமார் 500 சாயப்பட்டறைகளும், சட்ட விரோதமாக சுமார் 500 சாயப்பட்டறைகளும் செயல்பட்டு வருகின்றது.
சாயப்பட்டறைகள் தங்களின் சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால் பல சாயப்பட்டறைகளில் கழிவுநீரை அறிவியல் முறைப்படி சுத்தம் செய்யாமல் அப்படியே அமராவதி ஆற்றில் வெளியேற்றி வந்தனர். இவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்பேரில் முறையாக சாயக் கழிவுகளை வெளியேற்றாத சாயப்பட்டறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் முறையாக செயல்படாத சின்னான்டாங்கோவில், பெரிய ஆண்டான் கோவில், திருமாநிலையுர், அருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த சுமார் 138 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.