சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய மந்திரி சபை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவினால் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வர்த்தகர்களை பாதிக்கும். இந்த முடிவை எடுக்கும் முன்பு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தன்னிச்சையான முடிவை எடுப்பதன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிடிவாத போக்கையே வெளிப்படுத்துகிறது.
நாட்டில் 40 கோடி பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கின்றனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது.
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது. ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்சினைகளையும் கையாள நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு எடுத்த இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.