காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நாசம் – விவசாயிகள் பாதிப்பு
தஞ்சாவூர்: தொடர்மழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் வியாழக்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நிவாரணம் தேவை
கடந்த ஜூன் மாதம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் அவை நீரில் மூழ்கி அழுகத்தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரப்பர் தொழில் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரப்பர் மரங்களில் பால் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.