ஜவுளி, சர்க்கரை மீது 'வாட்' வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில நிதி மற்றும் வரிவிதிப்புத் துறை அமைச்சர்கள் அடங்கிய அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், "தற்போது ஜவுளித்துறை மோசமான சூழ்நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் இந்த துறைக்கு உகந்த சூழ்நிலையும் இல்லை. தமிழகத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளித் துறை, லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. மாநில பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த ஜுலை 12-ந் தேதி ஜவுளி மீது தமிழக அரசு 5 சதவீத வாட் வரி விதித்தது. ஜவுளித் தொழிலின் பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த வரி விதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஜவுளி மீது வாட் வரி விதிப்பது பற்றி மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது முறையானதாக இருக்காது. ஜவுளித் தொழிலின் நிலைமை இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பதை ஏற்கும் நிலையில் தமிழ்நாடு இல்லை.
மறுபரிசீலனை செய்யுங்கள்
எங்களது கருத்துகளை மனதில் கொண்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல சர்க்கரை மீதான் வாட் வரி விதிப்பு முடிவையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இந்தக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.