இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் - இளைஞர் காங். மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு
டெல்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய இளைஞர் காங்கிரஸ் மாநாடு திங்கட்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்
மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல்களை காங்கிரஸ் சந்திக்க வேண்டியது இருக்கிறது. இதற்கு இளம் தலைவர்களின் பங்கு அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும்.உத்தரபிரதேசத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பது உறுதி.
40 ஆண்டுகளுக்கு முன், நான் இளம் வயதில் இருந்தபோது, கொல்கத்தாவில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டேன். அப்போது நான் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதுபோல இப்போதும் இந்த கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு வழி விட வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
ஒரு கோடி உறுப்பினர்கள்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசுகையில்,
சாதாரண இந்திய குடிமகனின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டால், இந்தியாவில் முன்னேற்றம் உறுதி. காங்கிரஸ் கட்சியில்தான் ஜனநாயகம் இருக்கிறது. மற்ற கட்சிகளில் இளைஞர்களுக்கு இடம் இல்லை. இளைஞர் காங்கிரசில் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அரசியலிலும், நிர்வாகத்திலும் ஊழலை ஒழிக்க இளைஞர்கள் பெருமளவில் காங்கிரசில் சேர வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.