அடுத்ததாக கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்த சாமி.. சிபிஐ இயக்குனருடன் சந்திப்பு!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சிபிஐ இயக்குனர் ஏ.பி. சிங்கை நேரில் சந்தித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மனு கொடுத்தார்.
தனது புகார் மனுவில், வெளி நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்தவர்கள் இங்கு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து சாமி நிருபர்களிடம் பேசுகையில், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான புகார் மனுவுடன் ஏ.பி. சிங்கை நான் சந்தித்தேன். எனது மனு குறித்து 15 நாள்களில் முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் வருமான வரித்துறையின் நேரடி வரிகள் பிரிவு (Central Board of Direct Taxes) ஜெர்மன் நாட்டு வங்கிகளிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்த 18 பேரின் பெயர்களை சிபிஐயிடம் கொடுத்துள்ளது. ஆனால், ஒருவர் தவிர மற்ற 17 பேர் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று சிபிஐ பதில் தந்துள்ளது.
அதே நேரத்தில் ஜெர்மன் வங்கிகளில் சட்ட விரோதமாக கணக்கு வைத்திருந்த இந்த 18 பேரிடமிருந்தும் அபராதத் தொகையாக ரூ. 24.66 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது என்றார் சாமி.
இந்த சந்திப்பு குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறுகையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவராக உள்ள சுப்பிரமணிய சாமி ஒரு புகார் மனுவுடன் ஏ.பி. சிங்கை சந்தித்தார். அவரது புகார் பரிசீலிக்கப்படும் என்றும், அது சிபிஐயின் வரம்புக்குள் வருமானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.பி. சிங் உறுதியளித்தார் என்றார்.