தொடர் மழை-கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், சுற்றுவட்டரப் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள சீதோஷ்ணநிலையினால் குடிசைத் தொழில் போல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் விளங்கி வருகிறது.
தீப்பெட்டி தொழில் பாதிப்பு
கடந்த ஒரு மாதகாலமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உற்பத்தியான தீப்பெட்டி பண்டல்களும் ஏற்றுமதி ஆகாமல் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி தீப்பெட்டிகள் தேக்கம்
கந்தகத் தொழில் எனப்படும் தீப்பெட்டி தொழிலுக்கு மழை சீசன் என்றாலே அலர்ஜியான விஷயமாகும். ஏனெனில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் மீது ஈரக்காற்று பட்டாலே பயனற்று போகும் நிலை ஏற்படுமென இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்கு நாட்கள் பெய்த தொடர் மழையினால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக தீப்பெட்டி பண்டில்களை ஏற்ற முடியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள லாரிகள் அனைத்தும் பெட்ரோல் பங்குகள், லாரி ஷெட்கள், என ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.