ஆண் வேடமிட்டு சபரிமலைக்கு வந்த 3 இளம்பெண்கள் பிடிபட்டனர்
திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆண் வேடமிட்டு தரிசனம் செய்ய வந்த மூன்று இளம்பெண்கள் பிடிபட்டனர். அவர்களை எச்சரிக்கை செய்த போலீசார் பம்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மாலை அணிந்து வந்து இருமுடி செலுத்தி ஐயப்பசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்களை கண்காணிக்க பெண் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட பெண்கள்
இருப்பினும் போலீசாருக்குத் தெரியாமல் ஆண்வேடமிட்டும், போலி வயது சான்றிதழுடனும் வரும் பெண்கள் போலீசாரிடம் சிக்கி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில் சரங்குத்தி அருகே வைத்து சன்னிதானத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
அப்போது தனக்கு 52 வயது ஆகி விட்டதாக கூறி ஒரு சான்றிதழை போலீசாரிடம் காண்பித்தார். ஆனால் அந்த சான்றிதழ் போலி என விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் பெயர் வள்ளி என்றும், அவருக்கு 35 வயதுதான் ஆகியுள்ளது என்றும் போலீசார் கண்டு பிடித்தனர். செங்கல்பட்டை சேர்ந்த இவர் தனது உறவினர்களுடன் சபரி்மலைக்கு வந்திருந்தார். போலீசார் அவரை எச்சரித்து பம்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதே போல சன்னிதானத்தில் ஆண் வேடமணிந்து வந்த ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்களை போலீசார் பிடித்து திருப்பி அனுப்பினர்.