திமுக கண்டனக் கூட்டம்... வட சென்னை - அன்பழகன்; தென் சென்னை- குஷ்பு!
சென்னை: பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று நடக்கும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலர் க அன்பழகன், நடிகை குஷ்பு ஆகியோர் பேசுகிறார்கள்.
பால் விலை, பஸ் கட்டண விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மாவட்ட தி.மு.க. சார்பில் தனித் தனியாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தி.மு.க. சார்பில் புதுவண்ணாரப் பேட்டையில் தி.மு.க. கூட்டம் நடக்கிறது. தென்சென்னை மாவட்டம் தியாகராய பகுதி தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
வடசென்னை ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டம், புது வண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. டன்லப் ரவி தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். புலவர் சாமிநாகப்பன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, செங்கை சிவம், இரா.மதிவாணன், மற்றும் பலராமன், ராஜன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தென்சென்னை தியாகராய நகர் பகுதி தி.மு.க. சார்பில் தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்துக்கு கே.ஏழுமலை தலைமை தாங்குகிறார். நடிகை குஷ்பு சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.