ஆள்மாறாட்டம் செய்த வழக்கு- புதுவை மாஜி அமைச்சர் கல்யாணசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்
திண்டிவனம்: 10ம் வகுப்புத் தேர்வை ஆள் வைத்து எழுதிய வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று திண்டிவனம் கோர்ட்டில் ஆஜரானார்.
புதுவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் பத்தாம் வகுப்பில் பெயிலானவர். இதையடுத்து சமீபத்தில் நடந்த தனித் தேர்வின்போது இவர் பரீட்சை எழுத வராமல் ஆள் வைத்து தேர்வை எழுதினார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து கல்யாணசுந்தரம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கல்யாணசுந்தரம் தலைமறைவானார். அவரை போலீஸார் தீவீரமாக தேடி வந்தனர். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் போலீஸ் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் அவரது பதவியை முதல்வர் ரங்கசாமி பறித்தார்.
அவரது முன்ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கல்யாணசுந்தரம் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை நவம்பர் 29ம் தேதியன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கல்யாணசுந்தரத்தை திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று திண்டிவனம் கோர்ட்டுக்கு வந்தார் கல்யாணசுந்தரம். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.