76 ஜாதிகளின் உரிமையை பறிக்கும் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்- புதிய தமிழகம்
சென்னை: 76 ஜாதிகளின் உரிமையை பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
அப்போது நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் அரசியல் சாசனத்தின்படி வழங்கப்பட்டது. இதில் எந்த மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றாலும் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் கடந்த திமுக அரசு மத்திய அரசின் அனுமதியை பெறாமலேயே உள் இட ஒதுக்கீட்டை செய்துவிட்டது. அதுவும் குறிப்பாக 76 ஜாதிகள் உள் அடங்கியதில், ஒரு ஜாதிக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதின் காரணமாக, 76 சமூகத்தினர் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே 76 ஜாதிகளின் உரிமையை பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
பரமகுடி துப்பாக்கிசூட்டில் பலியான குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாள், பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கிடையே கசப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் சுமுகமான தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் பேச்சுவார்த்தையை புறக்கணிக்க கூடாது என்றார்.