முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தக்காளி விலையில் சரிவு-ஒரு பெட்டி தக்காளி 60 ரூபாயானது
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழகம் – கேரளா இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் அங்கு கொண்டு செல்லப்படுவது தடைபட்டுள்ளது.
60 ரூபாயாக சரிவு
இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள கோவை மாவட்டம் வேலந்தாவளம் காய்கறி சந்தைக்கு நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், பெருந்தலமன்னா பகுதி மக்கள் புளிப்புள்ள நாட்டுத் தக்காளியை அதிகம் விரும்பி வாங்கி செல்வர். தற்போது அங்கிருந்து வியாபாரிகள் வருவது தடைபட்டுள்ளதால் தக்காளிகள் தேக்கமடைந்துள்ளன.
இதனால் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 60 ரூபாயாக சரிந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் ஒரு பெட்டி தக்காளி 80 ரூபாய் விற்கப்பட்டது. பின்னர் 130 ரூபாயாக உயர்ந்தது. திடீரென தற்போது 60 ரூபாயாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி, நாச்சிபாளையம், சுந்தராபுரம், கிணத்துக்கடவு மற்றும் உடுமலையில் தக்காளி மார்க்கெட்கள் உள்ளன. இவற்றில் நாச்சிபாளையம், சாய்பாபா காலனி மார்க்கெட்களுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகமாக இருக்கும்.
இவ்விரு மார்க்கெட்களில் தான் தினசரி விலை நிர்ணயிக்கப்படுகிறது. அனைத்து சந்தைகளிலுமே தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. வியாழக்கிழமையன்று வாழைத்தார் வரத்து அதிகம் காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் 18 ரூபாய்க்கு விற்பனையானது.
முல்லைப் பெரியாறு பிரச்னையால் போக்குவரத்துக்கு ஆங்காங்கே தடை ஏற்பட்டுள்ளதாலும், சந்தைக்கு வரத்து அதிகரிதுள்ளதாலும் தக்காளி விலை சரிவுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.