சனிப்பெயர்ச்சி தினத்தில் திருநள்ளாறு கோவிலில் வி.வி.ஐ.பி.கள் தரிசனம் இல்லை- அமைச்சர் சந்திரகாசு
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலுக்கு வி.வி.ஐ.பி.கள் வருவதை தவிர்க்க வேண்டும். கூட்டத்துடன் சாமி தரிசனம் செய்பவர்கள் தாராளமாக வரலாம் என்று புதுச்சேரி வேளாண் அமைச்சர் சந்திரகாசு தெரிவித்துள்ளார்.
காரைக்காலை அடுத்த உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறில் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுச்சேரி வேளாண் அமைச்சர் சந்திரகாசு தலைமை வகித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருநள்ளாறில் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி அன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றோம்.
கடந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு மாநில கவர்னர் வருகை தந்தார். அப்போது கோவிலில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல பாதுகாப்பு போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.
அதே போல் சனிபெயர்ச்சி நேரத்தில் வி.வி.ஐ.பிகள் ஏராளமானோர் கோவிலிலுக்கு வருவதால் லட்சக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால் சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு கோயிலுக்கு வி.வி.ஐ.பி.கள் வருவதை தவிர்க்க வேண்டும். கூட்டத்துடன் சாமி தரிசனம் செய்பவர்கள் தாராளமாக வரலாம்.
ஆனால், சனிப்பெயர்ச்சி முடிந்து வரும் வி.வி.ஐ.பி.களை கோவில் நிர்வாகம் மிக சிறப்பாக வரவேற்கும். மேலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றோம், என்றார்.